Friday, January 23, 2015

மொழிபெயர்ப்பு

எழுதும் ஆர்வம் வந்தபிறகு எதைப் பற்றி எழுதுவது என்பது பெரிய கேள்விக் குறியானது. சிறு கதையா? நாவலா? அபுனைவுக் கட்டுரைகளா? இப்படிப் பல கேள்விகள் எழுந்தன எனக்குள்.
ஏன் நல்ல புத்தகங்களை (ஆங்கிலத்தில் வந்ததை) மொழி பெயர்த்துப் பார்க்கக் கூடாது? இது எழுத்துக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று தோன்றியது. முதல் விஷயம், எழுதும் பொருளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஏற்கனவே யாரோ ஒருவரெழுதி வைத்திருக்கிறார். நம்முடைய வேலை சுவை குறையாமல் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியதுதான்.

இந்த எண்ணம் வந்த பிறகு சில மொழி பெயர்ப்பு நூல்களைப் படித்தேன். எப்படி மொழிபெயர்க்கிறார்கள் என்று கவனித்தேன். மொழிபெயர்ப்பு என்று தெரியும்படியாகவே இல்லை. தமிழிலேயே எழுதப் பட்ட நூலாகத் தெரிந்தது.
எந்த நூலை மொழிபெயர்த்துப் பார்ப்பது? என்னுடைய வாசிப்பு ஒரு மாதிரியானது. கதை, கட்டுரை இப்படி ஒன்றும் விலக்கற்பாடில்லை. எனக்குப் பிடித்தமான புத்தகம் ஒன்றைஎடுத்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.

இந்த வேலையை ஆரம்பித்ததும்தான் இது எத்தனை சிரமமான வேலை என்று புரிந்தது. கொஞ்ச நாட்கள் முன்பாக கிழக்குப் பதிப்பகம் மூலமாக நடத்தப்பட்ட மொழிபெயர்ப்புப் பட்டறையின் ஒலி வடிவத்தைக் கேட்டேன். அதில் பேசிய மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் கூறிய விஷயங்களைக் கவனமாகக் கேட்டேன்.

மொழிபெயர்ப்பில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று, அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது. இரண்டு, எழுதியதை உள்வாங்கிக் கொண்டு தன் நடையில் எழுதுவது. முதல்முறையில் மிகவும் சிரமங்கள் உண்டு. ஆங்கில பழக்க வழக்கங்கள் வேறு, நம் வழக்கங்கள் வேறு. ஆகவே அவற்றைச் சொல்லும்  வழியும் மொழியும் வேறு. பார்க்கலாம் என்று துணிந்து காரியத்தில் ஈடு பட்டேன்.

முதல் புத்தகம் Children’s Geetha. திரு ராமானந்த ப்ரசாத் Ph.D எழுதிய புத்தகம். 
சிறுவர்களுக்கான கீதை. கதைகளைக் கலந்து கீதையின் முக்கியமான ஸ்லோகங்களைப் பற்றி விவரிக்கும் நூல். ஆரம்பத்தில் வேகமாகச் சென்ற மொழிபெயர்ப்பு அத்தியாயங்கள் போகப் போக மெதுவாகிப் போனது. மூல நூலில் சொல்லப்பட்ட கனமான விஷயங்களை மொழி பெயர்க்க நமக்கே கீதையைப் பற்றி நிறையத் தெரிந்திருக்க வேண்டும்.
இது நடந்து கொண்டிருக்கும் போதே இன்னும் சில புத்தகங்களை மொழிபெயர்க்க முயற்சி செய்தேன்.

அதுல் கவாண்டே என்ற அமெரிக்க சர்ஜன் எழுதிய Cheklist manifesto. மிக அருமையான புத்தகம். மிக அருமையான எழுத்தாளர். இதிலும் கொஞ்சப் பக்கங்கள் மொழி பெயர்த்தபின் வேகத் தடையாயிற்று. மருத்துவம் சம்பந்தப்பட்ட வார்தைகளுக்கு சரியான மொழிபெயர்ப்பு தெரியாததால் விளைந்த தடை இது. ஆனாலும் சமாளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச வருஷங்கள் முன்னால் குமுதம் இதழில் ‘ரத்தக் குழாயில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்’ என்ற தொடர் வந்தது. ஐஸக் அஸிமோவ் எழுதிய Fantastic Voyage என்ற புத்தகத்தின் அற்புதமான மொழிபெயர்ப்பு. அதன் ஆசிரியர் மொழிபெயர்ப்பில் கில்லாடியான ரா.கி. ரங்கராஜனாக இருக்க வேண்டும். அஸிமோவ் அதற்குப் பிறகு  Fantastic Voyage II எழுதியிருக்கிறார். ரொம்பவும் சுவையான நாவல். இதை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆனந்த் நீலகண்டன் என்பவர் ASURA  என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ராவணனைப் பற்றி அவன் சிறு பிராயத்திலிருந்து விவரிக்கும் புத்தகம். இது இன்னொரு கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட கதை. இதிலும் இரன்டு அத்தியாங்கள் போயிருக்கின்றன.

நடுவில் அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடன் பற்றி “Nowhere to Hide” என்ற புத்தகத்தைப் படிக்க நேரிட்டது. எந்த விதமான த்ரில்லருக்கும் குறைவில்லாத நிஜக் கதை. இதை மொழிபெயர்க்க ஆசையாக இருந்தது. இதை “ஒளிவதற்கு இடமில்லை” என்ற தலைப்பில் மொழி பெயர்த்து வருகிறேன்.

இதெல்லாம் என் சொந்த முயற்சி. காபிரைட் விஷயங்களால் இதைஎல்லாம் வெளியிட முடியுமா என்று தெரியாது. ஆனாலும் எழுதிப் பழக இது மிக நல்ல பயிற்சியாக அமைந்தது.

இப்போது வெளிவரும் பல தமிழ் புத்தகங்களுக்கே மொழிபெயர்ப்புத் தெவையாக இருப்பது வேறு விஷயம்!!

0 comments: