Friday, February 06, 2015

பிடித்த எழுத்தாளர்கள் – 2

ஆங்கிலத்தில் புத்தகம் படிக்க ஆரம்பித்தது கல்லூரி சென்ற பிறகுதான். உறவினர் ஒருவர் கல்லூரி நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொன்டு வந்து தருவார். அப்படி ஆரம்பித்ததுதான் ஆங்கிலப் புத்தகப் படிப்பு.

எனிட் ப்ளைட்டன் எழுதியது போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்கள் படித்ததே கிடையாது. ஏனென்றால், புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது குழந்தைப் பருவம் போய் விட்டது.
ஆரம்பத்தில் கஷ்டப் பட்டு ஏ.ஜே. க்ரானின், ஸாமர்ஸட் மாம், டு மாரியர் எல்லம் படித்தேன். பின் வந்தது என்னுடைய மிகப் பிடித்த எழுத்தாளர் எழுதிய புத்தகங்கள். அவர்தான் பி.ஜி. வுட் ஹவுஸ். இரண்டு மாத விடுமுறையில் அவருடைய 70 புத்தகங்களைப் படித்துத் தீர்த்தேன். நம்முடைய ‘தேவன்’ அவருடைய மறு உருவம்தான். இரண்டு பேரும் ஈடு இணையற்ற நகைச்சுவை எழுத்தாளர்கள். அவர்கள் போல இதுவரை நகைச்சுவையாக எழுத இதுவரைக்கும் பிறக்க வில்லை. இதற்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை பிடித்ததும், பிடிக்காததும் ஒவ்வொருவர் இஷ்டம். அதில் ‘ஏன்’ என்ற கேள்விக்கே இடமில்லை.

அடுத்த இஷ்டமான ஆங்கில எழுத்தாளர் ஜான் க்ரிஷாம். சரியான த்ரில்லர்கள். சுவையான கதைப் பின்னல்.

ராபின் குக், லுட்லும், டாம் க்ளான்ஸி,பாட்டர்ஸன்  போன்ற பலர் எழுதிய புத்தகங்கள் படித்திருந்தாலும் எனெக்கென்னவோ க்ரிஷாம் எழுத்து மிகவும் பிடிக்கும்.
நான் விரும்பும் இன்னொரு எழுத்தாளர் ஆர்தர் ஹெய்லி. அவருடைய ஒவ்வொரு புத்தகமும் ஒரு முத்து. புத்தகம் ஒவ்வொன்றும் ஒரு துறையைப் பற்றி இருக்கும். ஒரு புத்தகத்தைப் படித்து விட்டால் அத்துறையைப் பற்றிப் பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும். மிக நுணுக்கமாகப் பின்னப்பட்ட கதைகள். அழுத்தமான, மனதில் நிற்கும்படியான கதா பாத்திரங்கள்.
இப்போது எழுதும் கதாசிரியர்களில் எனக்குப் பிடித்தவர் லீ சைல்ட். இவர் ஜாக் ரீச்சர் என்னும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து பல நாவல்கள் எழுதி விட்டார். எல்லாமே த்ரில்லர்கள்தான். என்ன மாதிரியான நடை தெரியுமா? துள்ளி ஒடும். நிறைய சம்பாஷணைகள். சின்னச் சின்ன வாக்கியங்கள். பெரும்பாலானவை இலக்கண சுத்தமாக இருக்காது. ஆனால் கதையை மிக வேகமாக நகர்த்திச் செல்லும்.

இப்போது சில இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இல்லை இல்லை, ரொம்ப நாளாகவே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குஷ்வந்த் ஸிங், நயந்தாரா செகல், ஆர்.கே. நாராயண் போல பழைய எழுத்தாளர்கள். ரவி சுப்ரமணியன், சேதன் பகத், ரமேஷ் மேனன், ஆனந்த் நீலகண்டன், ஜும்பா லஹிரி (அமெரிக்கர், ஆனால் இந்திய வம்சாவளியினர்), அர்விந்த் அடிகா, அஷ்வின் சாங்கி போன்று இப்போது எழுதுபவர்கள் என்று நிறையப் படித்தாகி விட்டது.


அபுனைவுகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் ‘அதுல் கவாண்டே’. இவர் அமெரிக்காவில் வாழும் ஒரு ஸர்ஜன். திறமையான சர்ஜன் மட்டுமில்லை, அதை விடத் திறமையான எழுத்தாளர். நாம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது புத்தகங்களைத் தயங்காமல் சிபாரிசு செய்வேன்.

0 comments: