Monday, March 24, 2014

படிக்கும் படியான எழுத்து

டாக்டர் ருடால்ப் ப்லெஷ் என்பவர் எழுதிய "படிக்கும் படியான எழுத்துக் கலை" படித்திருக்கிறீர்களா? இது 1949ம் வருஷம் எழுதப் பட்ட புத்தகம். அது இன்றைக்கும் உபயோகமாக இருப்பது தான் இதன் விசேஷம்.

ஓய்வு பெற்ற நாளிலிருந்து விடாப் பிடியாக வலைப் பதிவுகள் படித்து வருகிறேன். பல பதிவுகளைப் படிக்கும் போது இந்தப் புத்தகத்தின் நினைவு வரும்.

மூச்சு வாங்கும் படியான வாக்கியங்களின் நீளம், புரிந்து கொள்ளவே முடியாத வார்த்தைகள், இவை எழுதுபவர் சொல்ல வருவதைக் குழப்பி விடுகின்றன. இப்படிப்பட்ட பதிவுகளைக் கண்டதும் காத தூரம் ஓடுவது என் வழக்கம்.

நான் மேற் சொன்ன புத்தகம் மட்டுமல்ல, மற்றும் பலரும் இதையே சொல்லியிருக்கிறார்கள். சின்ன, எளிதான வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்; சுலபமாக அவைகளைக் கோர்த்து சின்ன வாக்கியங்களாக எழுதுங்கள்; உரையாடும் தமிழில் எழுதுங்கள்.  அதற்காக கொச்சையாக எழுத வேண்டாம்.

ஆங்கிலத்தில் லீ சைல்ட் புத்தகங்கள் படித்துப் பாருங்கள். அவருடைய வெற்றிக்கு அவரின் எழுத்து நடையும் பெரிய காரணம். எந்த ஒரு வாக்கியமும் 8 முதல் 12 வார்த்தைகளுக்கு மேல் போகாது. ரொம்ப இலக்கண சுத்தமான வாக்கியங்கள் இருக்காது. ஆனால் அவை கதைப் போக்கின் அவசரத்தை அதிகப் படுத்தும். வர்ணனை ஆகட்டும், உரையாடல் ஆகட்டும், இதே மொழிதான், வாக்கிய கட்டுமானம் தான்.

தமிழிலும் இப்படி எழுதுபவர்கள் நிறையப் பேர் உண்டு. ஆங்கிலத் தாக்கம் இல்லாமலே தமிழில் இப்படி நிறையப் படித்திருக்கிறேன்.

மொழியின் முக்கியமான நோக்கம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதுதானே? அதுவே மறைந்து விடும் போது அடிப்படையிலேயே தவறு நடக்கிறது என்பது என் எண்ணம்.

அதற்காக வர்ணனைகள் கூடாது என்று சொல்ல வில்லை. கல்கியின் வர்ணனைகளைப் படித்துப் பாருங்கள், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது தெரியும்.

0 comments: