Sunday, February 22, 2015

ஸ்பூர்த்தி ! ஸ்பூர்த்தி !

அப்பாடா! ஒரு வழியாக ஸ்பூர்த்தி ஜெயிச்சாச்சு! “ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“எல்லாம் இன்பமயம்” என்று ஸ்பூர்த்தி எடுத்ததுமே தெரிந்து விட்டது, இன்னிக்கு ஒரு சூப்பர் பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கப் போகிறாள் என்று. கொஞ்சமும் ஏமாற்ற வில்லை.

பரத் வருவாரென்று நினைத்தேன். அது நடக்க வில்லை. அவர் எப்படியும் தனுஷுக்குப் பாடப் போகிறார். ஸ்ரீஷா வும் அப்படித்தான். பின்னணி பாட சான்ஸ் உன்டு என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது. அனுஷ்யா தான் கொஞ்சம் பாவம். அவள் பாடியதிலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது “எந்த ஊர் போனாலும்”.

முந்தின சீசனில் மிகவும் சங்கீத அறிவுள்ள குழந்தைகளுக்கு (பிரகதி) முதலிடம் கிடைக்காத குறையை இந்த வருஷம் விஜய் டி.வி. போக்கி விட்டது.

எல்லாப் போட்டிகளின் முடிவிலும் ஏதாவது சர்ச்சை இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த முடிவுகளிலும் கண்டிப்பாக இருக்கும்.

ஸ்பூர்த்திக்கும், அவள் அப்பா அம்மாவுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். குழந்தைக்கு அபாரமான சங்கீத அறிவு இருக்கிறது. அதை ஸினிமா சங்கீதத்தில் கரைத்து விடாதீர்கள். ஒரு சுதா ரகுனாதன் போல, நித்யஸ்ரீ போல வர வேண்டிய குழந்தை.

நிறைய ஆசீர்வாதங்கள். நிறைய சுற்றிப் போடுங்கள்.

Friday, February 06, 2015

பிடித்த எழுத்தாளர்கள் – 2

ஆங்கிலத்தில் புத்தகம் படிக்க ஆரம்பித்தது கல்லூரி சென்ற பிறகுதான். உறவினர் ஒருவர் கல்லூரி நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொன்டு வந்து தருவார். அப்படி ஆரம்பித்ததுதான் ஆங்கிலப் புத்தகப் படிப்பு.

எனிட் ப்ளைட்டன் எழுதியது போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்கள் படித்ததே கிடையாது. ஏனென்றால், புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது குழந்தைப் பருவம் போய் விட்டது.
ஆரம்பத்தில் கஷ்டப் பட்டு ஏ.ஜே. க்ரானின், ஸாமர்ஸட் மாம், டு மாரியர் எல்லம் படித்தேன். பின் வந்தது என்னுடைய மிகப் பிடித்த எழுத்தாளர் எழுதிய புத்தகங்கள். அவர்தான் பி.ஜி. வுட் ஹவுஸ். இரண்டு மாத விடுமுறையில் அவருடைய 70 புத்தகங்களைப் படித்துத் தீர்த்தேன். நம்முடைய ‘தேவன்’ அவருடைய மறு உருவம்தான். இரண்டு பேரும் ஈடு இணையற்ற நகைச்சுவை எழுத்தாளர்கள். அவர்கள் போல இதுவரை நகைச்சுவையாக எழுத இதுவரைக்கும் பிறக்க வில்லை. இதற்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை பிடித்ததும், பிடிக்காததும் ஒவ்வொருவர் இஷ்டம். அதில் ‘ஏன்’ என்ற கேள்விக்கே இடமில்லை.

அடுத்த இஷ்டமான ஆங்கில எழுத்தாளர் ஜான் க்ரிஷாம். சரியான த்ரில்லர்கள். சுவையான கதைப் பின்னல்.

ராபின் குக், லுட்லும், டாம் க்ளான்ஸி,பாட்டர்ஸன்  போன்ற பலர் எழுதிய புத்தகங்கள் படித்திருந்தாலும் எனெக்கென்னவோ க்ரிஷாம் எழுத்து மிகவும் பிடிக்கும்.
நான் விரும்பும் இன்னொரு எழுத்தாளர் ஆர்தர் ஹெய்லி. அவருடைய ஒவ்வொரு புத்தகமும் ஒரு முத்து. புத்தகம் ஒவ்வொன்றும் ஒரு துறையைப் பற்றி இருக்கும். ஒரு புத்தகத்தைப் படித்து விட்டால் அத்துறையைப் பற்றிப் பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும். மிக நுணுக்கமாகப் பின்னப்பட்ட கதைகள். அழுத்தமான, மனதில் நிற்கும்படியான கதா பாத்திரங்கள்.
இப்போது எழுதும் கதாசிரியர்களில் எனக்குப் பிடித்தவர் லீ சைல்ட். இவர் ஜாக் ரீச்சர் என்னும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து பல நாவல்கள் எழுதி விட்டார். எல்லாமே த்ரில்லர்கள்தான். என்ன மாதிரியான நடை தெரியுமா? துள்ளி ஒடும். நிறைய சம்பாஷணைகள். சின்னச் சின்ன வாக்கியங்கள். பெரும்பாலானவை இலக்கண சுத்தமாக இருக்காது. ஆனால் கதையை மிக வேகமாக நகர்த்திச் செல்லும்.

இப்போது சில இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இல்லை இல்லை, ரொம்ப நாளாகவே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குஷ்வந்த் ஸிங், நயந்தாரா செகல், ஆர்.கே. நாராயண் போல பழைய எழுத்தாளர்கள். ரவி சுப்ரமணியன், சேதன் பகத், ரமேஷ் மேனன், ஆனந்த் நீலகண்டன், ஜும்பா லஹிரி (அமெரிக்கர், ஆனால் இந்திய வம்சாவளியினர்), அர்விந்த் அடிகா, அஷ்வின் சாங்கி போன்று இப்போது எழுதுபவர்கள் என்று நிறையப் படித்தாகி விட்டது.


அபுனைவுகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் ‘அதுல் கவாண்டே’. இவர் அமெரிக்காவில் வாழும் ஒரு ஸர்ஜன். திறமையான சர்ஜன் மட்டுமில்லை, அதை விடத் திறமையான எழுத்தாளர். நாம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது புத்தகங்களைத் தயங்காமல் சிபாரிசு செய்வேன்.

Thursday, February 05, 2015

பிடித்த எழுத்தாளர்கள்

படிப்பதில் ஆசை இருக்கும் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர்கள் இருப்பார்கள். எனக்கும் இருக்கிறார்கள்.

முதல் இடம் ‘கல்கி’க்குத்தான். நினைவு தெரிந்த நாளில் முதலில் படித்தது கல்கியின் எழுத்துக்கள்தான். மகா எளிமையான மொழி. கதை சொல்லும் உத்தியோ கேட்கவே வேண்டாம். அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும். படித்து முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்கவே மனது வராது. “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு”, “அலை ஓசை”, “தியாக பூமி”, “சோலைமலை இளவரசி” இப்படி எத்தனையோ. எல்லாப் புத்தகங்களையும் பலமுறை படித்திருக்கிறேன். “அமர தாரா” தான் ஒரே ஒரு தடவை படித்தது.

கல்கியின் எழுத்துக்கள் பற்றி பலவிதமான விமர்சனங்கள் உண்டு. ஒரு சமீபத்திய எழுத்தாளர் அவர் குழந்தை எழுத்தாளர் என்று எழுதினார். சரித்திரக் கதைகள் எழுதுவது எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டவர் ஏராளம். அவருடைய சமூகக் கதைகள், அவரின் சரித்திரக் கதைகள் அளவுக்கு அங்கீகாரம் பெற வில்லை என்றே தோன்றுகிறது.
நேர்த்தியான பாத்திரப் படைப்பு, நாம் பேசுவது போலவே எழுதப்பட்ட உரையாடல்கள் என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அடுத்த இடம் ‘தேவன்’ என்ற கதாசிரியருக்குத்தான். ‘ராஜத்தின் மனோரதம்’, ‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’, ‘ஸி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’ இப்படி நிறைய மாஸ்டர்பீஸ்கள் உண்டு. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் படியாக எழுதும் மந்திர நடை. அதை நம் கையகப்படுத்திக் கொள்ளுவது மிகவும் சிரமம்.

ரா.கி. ரங்கராஜன் ஒரு ஆச்சரியமான எழுத்தாளர். அவருடைய கற்பனைத் திறன் அசாத்தியமானது. எழுதித் தள்ளிய எழுத்தாளர்களில் இவர் குறிப்பிடத் தகுந்தவர். சரித்திரக் கதை, திகில் கதை, துப்பறியும் கதை, சமூக நாவல் இப்படி எதையும் விட்டு வைக்காதவர். கதை எழுதுவது எப்படி என்றும் சொல்லிக் கொடுத்தவர்.

நான் கல்லூரியில் படிக்கும் போது எழுத ஆரம்பித்தவர் சுஜாதா. நண்பர்களுக்குள் நடந்த சூடான விவாதங்கள் சுஜாதாவின் கதைகளைப் பற்றியதாகவே இருக்கும். நைலான் கயிறில் ஆரம்பித்தது கதை கதையாக, தொடர் தொடராகத் தொடர்ந்தது. ஒரு மனிதன் இவ்வளவு விஷயங்களைப் பற்றி சுவாரசியம் குறையாமல் எழுத முடியுமா என்று ஆச்சரியப் பட வைத்த எழுத்தாளர் சுஜாதா.

இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்தவர் பா.ராகவன். இவரது இரண்டு அபுனைவுத் தொடர்களைப் படித்தவுடன் அவர் எழுத்து நடையால் கவரப் பட்டேன். அதனால் அவருடைய வலைத் தளம், ட்விட்டர் செய்திகள் ஆகியவற்றைப் படிக்க ஆரம்பித்து விசிறியாகி விட்டேன். சரியான இளையராஜா, மாக் இவைகளின் வெறியர் என்று தோன்றுகிறது. அதே போல் தன்னுடைய பிழையில்லாத எழுத்தில் அபாரப் பெருமை கொண்டவர். பலருக்கு எழுத்திலும், இலக்கணத்திலும் வாத்தியார். இப்போது இணையத்தில் எழுதப்படும் தமிழில் மலிந்திருக்கும் பிழைகளை எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ தெரியாது. அவ்வப்போது ஒன்றிரு குறுஞ் செய்திகளோடு சரி.


நாக்கைக் கன்னத்துக்குள் மடித்து வைத்துக் கொள்ளுவது என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உள்ளது. அதற்குச் சரியான உதாரணம் எழுத்தாளர் பேயோன். அவருடைய சில ட்விட்டர் செய்திகள் மாணிக்கங்கள். படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. தனக்கு சாகித்ய அகாடமியிலிருந்து நோபல் பரிசு வரை கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, கருத்து உள்ளவர். இறைவன் செவி சாய்ப்பார் என்று நம்புவோம்.